- ஏப்ரல் 1, 2025
உள்ளடக்கம்
இந்த காரடையான் நோன்பு, நம் கலாச்சாரத்தின் அழகிய வெளிப்பாடு. இது, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பெண்களின் வலிமையையும் எடுத்துரைக்கிறது.
பூஜை முறை: பூஜை அறையில் விளக்கேற்றி, கோலம் (Karadaiyan Nombu Kolam) போட்டு வைக்க வேண்டும். சுவாமிக்குப் படைப்பதற்கான இடத்தில் பெரிதாகக் கோலம் போட்டு, அதன் மீது நுனி இலையினைப் போட்டு (முழு இலை அவசியம் இல்லை) வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சுமங்கலிகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் (இரட்டைப் படையில் போடுவது நல்லது, ஒற்றைப்படையில் இருந்தாலும் கூடுதலாக ஒன்றினை சாவித்ரியை நினைத்துப் போடலாம்) தனித்தனிக் கோலம் சிறிய அளவில் போடவேண்டும். கோலங்களுக்கு மேலே சிறு துண்டுகளாக நுனி இலை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சுவாமி இலையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் சரடு (மஞ்சள் சரடில் பூ இதழ் நடுவில் கட்டியது) ஆகியவற்றை மேல்பகுதியில் வைத்து, இலையின் நடுவில் வெல்ல அடையையும், வெண்ணெயையும் வைக்க வேண்டும்.
பின்னர் எல்லா இலைகளிலும் அதே போல் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று இலையாகப் போடக்கூடாது. எனவே குறைந்தது நான்கு இலைகளாகப் போட்டு பூஜிக்க வேண்டும். அம்மனுக்கு உகந்த துதிகள் சொல்வது, சத்யவான் சாவித்ரி கதையை பாராயணம் செய்வது போன்றவற்றுக்குப் பிறகு, மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தூப, தீப ஆரத்திகள் காட்டிவிட்டு, நிவேதனம் செய்யும் விதமாக முதலில் அம்மனுக்குப் போட்டுள்ள இலையைச் சுற்றி சிறிது நீரை விடவேண்டும்.
அதன் பிறகு அவரவர் இலைகளை நீரால் சுற்றி நைவேத்தியம் செய்து மங்கள தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு வயதில் மூத்த சுமங்கலி, அம்மனை வேண்டிக் கொண்டு அம்மனின் படத்திற்கு ஒரு சரடினை சாத்திவிட்டு, தான் ஒன்றை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டு, பின் தன் குடும்ப இளைய பெண்களுக்குக் கட்டிவிட்டு, ஆசிர்வாதம் வழங்கவேண்டும். (பொதுவாக இந்த விரதத்தின்போது காமாட்சி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்வார்கள் என்பதால், இதற்கு காமாட்சி விரதம் என்றும் பெயர் உண்டு).
“உருகாத வெண்ணெயும், ஓர் அடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன், எந்நாளும் என் கணவர் எனை விட்டு பிரியாதிருக்க வேண்டும்” என்று அம்மனை நோக்கி வேண்டி நமஸ்கரிக்கவும்.
நோன்பு ஆரம்பித்தது முதல் முடியும் வரை தீபம் ஒளிர்தல் மிகவும் விசேஷமாகும். மாசி மாதம் முடியும் முன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர மற்ற சுமங்கலிகள் நோன்பு (காலம்) நேரம் முழுவதும் உபவாசம் இருந்து அடை நைவேத்யத்தையே பலகாரம் செய்ய வேண்டும். வேறு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும். மற்றவர்கள் எளிய பலகாரம், பால், பழம் சாப்பிடலாம். நோன்பு நோற்றபின்னும் அந்த நாள் முழுக்க பெண்கள் அடைதான் சாப்பிடலாம்.
தோ³ரம்ʼ க்³ருʼஹ்ணாமி ஸுப⁴கே³ ஸஹாரித்³ரம் த⁴ராம்யஹம் |
ப⁴ர்து²: ஆயுஸ்² ஸித்³த்⁴யர்த²ம்ʼ ஸுப்ரீதா ப⁴வ ஸர்வதா³ ||
அன்றைய தினம் சில அடைகளை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும். மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு, பிறகு அந்த அடைகளை எடுத்துச் சென்று பக்கத்தில் அல்லது அவரவர் வீட்டில் பசு இருந்தால் அதற்குத் தந்துவிட்டு, வலம் வந்து வணங்க வேண்டும். அப்படி வலம் வரும் சமயத்தில், “மலை ஏறிப் புல் மேய்ந்து மடு இறங்கி நீர் பருகும் கோமாதாவே, என் தாலி பாக்யம் என்றைக்கும் நிலைக்கும் வரம் எனக்குத் தா!” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி அவரவரது வழக்கப்படியான வேலைகளில் ஈடுபடலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், மணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். கன்னியர்க்கு மனம்போல மாங்கல்யம் அமையும். இந்த விரதத்தை காமாட்சி அம்மனே சாவித்ரிக்குச் சொன்னதாகவும் ஒரு புராணக் கதை உண்டு. அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரதம் ஆகும்.
Also, read